DNA பரிசோதனை பற்றி தெரிந்து கொள்வதற்க்கு முன் சிறிய அறிவிப்பு: இந்த வழக்கை புரிய வைக்க நீண்ட பதிவை எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இதே பதிவை சுருக்கமாக தெரிந்துகொள்ள ஒரு வீடியோவை எனது YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளேன் அதையும் பார்க்கலாம் மேலும் இதில் ஒரு வழக்கை பற்றி கூறியுள்ளேன் அதன் தீர்ப்பு விபரத்தையும் வீடியோ லிங்கையும் இந்த பதிவின் கடைசியாக கீழே பதிவிட்டுள்ளேன்.


முதலில் DNA என்றால் என்ன என்று மட்டும் தெரிந்து கொண்டு விஷயத்திற்க்கு போவோம் DNA என்பதை மரபணு என்று சொல்லலாம். இது மனிதனின் வம்சாவளியைக் கண்டுபிடிக்க உதவுகிறது. 


இதை பற்றி நம்ப முடியாத பல விஞ்ஞான ரீதியான தகவல்கள் அறிவியல் உலகத்தில் உள்ளது. இந்த மரபணு பரிசோதனையை பயன்படுத்தி சட்டப்பூர்வமான பல வழக்குகளிலும் பல தீர்வுகளை பெற்று வருகிறோம்.

Can-DNA-test-be-done-in-divorce-case

எதற்காக DNA பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது?


  1. குழந்தைகளை தத்தெடுக்க ஆதாரங்களை திரட்ட DNA பரிசோதனை பயன்படுகிறது.
  2. பெற்றோர் என்ற உரிமைக்காக DNA பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
  3. பரம்பரைச் சொத்து உரிமையை மீட்டெடுக்க DNA பரிசோதனை பயன்படுத்தபடுகிறது.
  4. சமூதாய நன்மைக்காக DNA பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
  5. குடிவரவு கண்டுபிடிக்கவும் DNA பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
  6. திருமணத்திலிருந்து பிறந்த குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க DNA பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. 
  7. இரத்த உறவுக்கான ஆதாரம் தேவைப்படும் காலத்தில் இரத்த மாதிரிகளை ஆராய DNA பரிசோதனை பயன்படுத்தபடுகிறது.

இப்படி பல்வேறு வழிகளில் இந்த DNA பரிசோதனை சட்டத்திற்கு பயன்படுகிறது. இந்த DNA சோதனையை பற்றி தற்போது உங்களுக்கு கொஞ்சம் விளங்கியிருக்கும் இப்போது நமது பதிவின் கேள்விக்கான பதிலை சொன்னால் உங்களுக்கு தெளிவாக புரியும் என்று நம்புகிறேன்.

விவாகரத்து வழக்கில் DNA பரிசோதனை செய்ய அனுமதி பெற முடியுமா?


நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடக்கும் போது இரு தரப்பும் ஒருவர் இன்னொருவர் மீது குற்ற சாட்டுகளை சொல்லி கொண்டே போவார்கள் மேலே குறிப்பிட்ட வழக்கு மனைவியின் கள்ளதொடர்பின் (adultery) அடிப்படையில் பிறந்த குழந்தையின் அப்பா யார் என்ற குழப்பத்தில் விவாகரத்து வேண்டுகிறார் என்றால் அதை சரி செய்ய அந்த குழப்பத்தை தெளிவுபடுத்த டிஎன்ஏ டெஸ்ட் (DNA Test)சில வழக்குகளில் தேவைப்படுகிறது.

அந்த குழந்தையின் வம்சாவளியை கண்டறிய இந்த பரிசோதனைக்கு அந்த கணவரோ மனைவியோ உத்தரவு கேட்டு நீதிமன்றத்தில் அந்த வழக்கில் மனு செய்யலாம் அதை விசாரணை செய்து நியாயமாக கருதும் பட்சத்தில் நீதிபதி DNA பரிசோதனைக்கு உத்தரவிடுவார்.

ஒருவரின் டிஎன்ஏ சோதனை ஒரு குழந்தையின் உயிரியல் தந்தையை யார் என்பதை தீர்மானிக்கிறது.

நாம் அனைவரும் நமது உயிரியல் மரபணுவை பெற்றோரிடமிருந்து பெறுகிறோம்.

நமது உயிரியல் மரபணுவை அம்மாவிடமிருந்து பாதியும் தந்தையிடமிருந்தும் பாதியும் பெறுகிறோம். தாய் மற்றும் தந்தை அடையாளத்தை கண்டறிய பயன்படுகிறது.

மேலும் அனுபவம் வாய்ந்த ஆய்வகத்தில் சரியாகச் செய்யப்படும் போது அது உயிரியல் உறவின் மிக உறுதியான ஆதாரமாகும்.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே உள்ள உயிரியல் உறவைப் பற்றிய சந்தேகங்களை உறுதிப்படுத்த அல்லது நீக்குவதற்கு இன்று தெரிந்து கொள்ள வேண்டிய மிகச் சரியான முறையாக இது உள்ளது.  

ஒரு குழந்தை உலகிற்கு வருவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் குழந்தையின் பிறப்பைச் சுற்றியுள்ள வெளிப்புற காரணிகள் அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தையின் தந்தை யார் என்று உறுதியாகத் தெரியாத தாயாக இருந்தாலும் அல்லது தந்தைவழியை நிறுவும் நோக்கத்தில் இருக்கும் ஒரு ஆணாக இருந்தாலும், DNA பரிசோதனையைக் கோருவதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். டிஎன்ஏ பரிசோதனையைக் கோருவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் அதை போல இதில் இருக்கும் சட்ட ரீதியான குழப்பங்களையும் வழக்கறிஞரை சந்தித்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.

விவாகரத்து வழக்கில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று அக்குழந்தையின் தந்தை கூறி DNA டெஸ்டிற்கு அக்குழந்தையின் DNA-வை பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பதை இன்றைய பதிவில் ஏ‌ற்கனவே இது சம்மந்தமான நீதிமன்றத்தில்நடந்து முடிந்த ஒரு தீர்ப்பையும் அந்த வழக்கையும் பற்றி சொன்னால் உங்களுக்கு இந்த மாதியான வழக்கின் தன்மை பற்றி நன்றாக புரியும் என்று நினைக்கிறேன் வாருங்கள் அதை தெரிந்து கொள்வோம்.

விவாகரத்து வழக்கில் DNA பரிசோதனை செய்ய அனுமதி  பெற்ற வழக்குகளின் தீர்ப்பு விபரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பு நீதிமன்றத்தில் முனியப்பன் என்பவர் தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

அந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்து, அதில் தான் மனைவியை விட்டு 12.4.2001 முதல் 20.5.2002 வரை பிரிந்து இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் பெங்களூரில் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக மேசன் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விட்டதாகவும், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகவும், அந்த சமயத்தில் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அது இரண்டாவது குழந்தை என்றும், நான் மனைவியை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வந்த நிலையில், மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ள எவ்வித வாய்ப்புகளும் இல்லாத நிலையில் குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், தனது மனைவி வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு வைத்து அதன் விளைவாகவே குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்றும் கூறி குழந்தையின் இரத்தத்தையும், தனது இரத்தத்தையும் எடுத்து DNA TEST க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

அந்த இடைக்கால மனுவிற்கு எதிருரை தாக்கல் செய்த மனைவி அதில் கணவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து தனது கெளரவத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கணவர் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

அந்த வழக்கின் மனுவை விசாரித்த நீதிபதி, முனியப்பன் இரண்டாவது குழந்தையின் பிறந்த தேதியை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் குழந்தை பிறந்த போது அவர்களுடைய திருமணம் நடைமுறையில் இருந்ததாகவும், மனைவியை இரத்த பரிசோதனைக்கு நீதிமன்றம் கட்டாயப்படுத்தினால் அது அவருடைய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று கூறி முனியப்பன் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி வழக்கின் உத்தரவினால் பாதிக்கப்பட்ட முனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதியரசர் திரு. S. பழனிவேலு விசாரித்தார்.

தற்போது முனியப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், வம்சாவளியை கண்டறிய ஒருவரின் இரத்தத்தை எடுத்து DNA TEST க்கு அனுப்புவது இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 க்கு முரணானது அல்ல. 

அது தனி நபருடைய சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகாது. அதே நேரத்தில் DNA பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவின் மூலமாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் இரத்தத்தை எடுத்து அனுப்புவதை ஒரு வாடிக்கையான செயலாக வைத்துக் கொள்ளக்கூடாது. 

உண்மையில் DNA பரிசோதனைக்கு இரத்தத்தை அனுப்புவதற்கு முகாந்திரம் இருக்கிற வழக்குகளில் மட்டுமே பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். 

மேலும் சம்மந்தப்பட்ட வழக்கில் அத்தகைய முகாந்திரம் இருப்பதால் முனியப்பனின் மனுவை அனுமதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு " சாரதா Vs தனபால் (2003-2-CTC-760)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார்.

முனியப்பனின் மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், DNA பரிசோதனையை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒரு முடிவு எடுக்க முடியாது என்றும், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை மறுத்து அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் எனவே இந்த வழக்கில் DNA TEST க்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs போஷி ராம் (2001-3-LW-411)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம்,
உச்சநீதிமன்றம் " கெளதம் குண்டூ Vs மேற்கு வங்காளம் (1993-3-SCC-418)" என்ற வழக்கில், DNA பரிசோதனை என்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. நமது அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 வழங்கியுள்ள உரிமையை அது எந்த வகையிலும் பாதிக்காது என்றும், ஒருவர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தனது இரத்தத்தை பரிசோதனைக்கு தர மறுத்தால் அது அவருக்கு எதிரான முடிவினை எடுக்க ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று கூறியது.

உச்சநீதிமன்றம் கெளதம் குண்டூ வழக்கிலும், சாரதா வழக்கிலும் மேற்படி  DNA TEST குறித்து பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கீழ்கண்ட முடிவுகளை உச்சநீதிமன்றம் எடுத்தது.

1.  குடும்ப நல வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் ஒரு நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படும்படி உத்தரவிடலாம்.

2. அவ்வாறு நீதிமன்றம் இடும் உத்தரவு தனிமனித சுதந்திரத்தை பாதிக்காது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 ன் வழங்கிய உரிமைக்கு எதிரானது அல்ல.

3. நீதிமன்றங்கள் தன்னுடைய அதிகாரத்தை நல்ல முகாந்திரம் உள்ள வழக்குகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் இப்படி ஒருவரை இரத்த பரிசோதனை செய்ய உத்திரவிட்டு அவர் பரிசோதனை செய்ய மறுத்தால் அதனை அவருடைய வழக்கிற்கு எதிரானதாக முடிவெடுக்க பயன்படுத்தலாம்.

அதன் பிறகு இதை போன்ற துவாரகா பிரசாத் சத்பதி Vs பிதியூத் பிரவா டிக்ஸிட் (1999-SCC-675) என்ற வழக்கில், மகன் DNA TEST க்கு தன்னை உட்படுத்தி தான் மனுதாரரான தந்தைக்கு பிறந்ததை நிரூபிக்க நீதிமன்றத்தில் கோரினார். தந்தை தரப்பில் 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. 

அதன்படி அந்த மேல்முறையீடு 20.8.1999 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. திரும்பவும் வழக்கு நாடாகும் தேதியில் தந்தையின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன்னுடைய கட்சிக்காரர் இரத்த பரிசோதனை செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த காரணத்திற்காக உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டாளரே 1 ஆம் எதிர் மனுதாரருக்கு தந்தை என தீர்ப்பு கூறியது.

உச்சநீதிமன்றம் கெளதம் குண்டூ வழக்கில் DNA TEST க்கு ஒருவரை உட்படுத்த சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் DNA TEST செய்ய மனுத்தாக்கல் செய்தால் அத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க உத்திரவிடக்கூடாது. 

ஒருவரை நீதிமாற்றத்தில் DNA TEST க்கு உத்திரவிடுவது வாடிக்கையான விஷயமாக நீதிமன்றம் கருதக்கூடாது. ஏன்னெனில் அது ஒரு குழந்தை முறை தவறி பிறந்த குழந்தை என்கிற கெட்டப் பெயரையும், அக்குழந்தையின் தாய்க்கு நடத்தை சரியில்லாதவள் என்ற அவப்பெயரையும் உருவாக்கிவிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம். 

இந்த காரணத்தினால் ஒருவரை இரத்த மாதிரி தரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சாரதா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு 'கெளதம் குண்டூ' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மாறுபட்ட கருத்தினை கூறியுள்ளது.

சாரதா வழக்கு ஒருவரை DNA TEST க்கு இரத்த மாதிரியை தரும்படி நீதிமன்றம் உத்தரவிடுவது அவருடைய தனிமனித சுதந்திரத்தை பாதிக்காது என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 க்கு முரணானதாகவும் கருத வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

ஆக உச்சநீதிமன்றம் DNA TEST க்கு ஒருவரை உட்படுத்த இரத்த மாதிரி தரும்படி உத்தரவிடுவதை முழுவதுமாக தடை செய்யவில்லை. 

ஆனால் அப்படி உத்தரவிடுவதை நீதிமன்றங்கள் ஒரு வாடிக்கையான செயலாக வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாகிறது.

இந்த வழக்கில் முனியப்பன் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வந்ததாகவும், அந்த கால கட்டத்தில் மனைவியை சந்திக்கவே இல்லை என்று கூறி அதனை நிரூபிக்க DNA TEST க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதனால் தனது வழக்கை நிரூபிக்க ஆதாரம் கிடைக்கும் என்று கூறி இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். 

எனவே முனியப்பன் போட்ட மனுவை சார்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சரியானதல்ல. அந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும்.
என்ற அடிப்படை காரணத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் திரு. S. பழனிவேலு தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 1498/2009
முனியப்பன் Vs பொன்னி
2011-1-LW-26

விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் DNA Test பண்ண அனுமதி பெற முடியுமா என்பதை இந்த வீடியோவில் பார்க்க இதோ லிங்க் விவாகரத்து வழக்கில் DNA Test

Post a Comment

أحدث أقدم