நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.
இந்தியாவில் மக்கள் வாங்கும் பொருள்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற காரணத்திற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை டிசம்பர் மாதம் 24-ம் தேதியன்று 1986-ம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு கொடுவரப்பட்டது. இதற்குமுன் இருந்த சட்டத்தில் நுகர்வோர் நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் கொடுவரப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம் என்னவென்றால் எளிமையான முறையில் குறுகிய காலத்தில் செலவில்லாமல் வழக்கை நடத்தி நிவாரணம் பெறுவதாகும்.
முன்பிருந்த சட்டத்தின் படி சாதாரணமாக நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெறுவதால் காலதாமதம் ஏற்படுவதுடன் செலவும் ஏற்படும்.
இதனால் நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்பவர்கள் அதிகப்படியான தொகையில் ஏமாற்றப்படும் போது மட்டும் வழக்கு தாக்கல் செய்கிறார்கள் மற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதில்லை. எனவே இந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பழைய சிவில் சட்டத்திலுள்ள குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் நடைமுறைகள்.
நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் தொடர சில நடைமுறைகள் இருக்கிறது அதன்படிதான் வழக்கு எங்கே தாக்கல் செய்வது நீதிமன்றங்களின் வகைகள் யாவை, என்னென்ன ஆதரங்கள் தகுதிகள் தேவை என்பதை அறிய முடியும் மேலும் அதை விரிவாக பார்ப்போம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் வகைகள்.
மாவட்ட அளவிலான மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்.
மாநில அளவிலான நுகர்வோர் மாநில ஆணையம்,
தேசிய அளவிலான நுகர்வோர் தேசிய ஆணையம் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.
இதில் முதலில் குறிப்பிட்டுள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் நீதிமன்றத்தை மட்டும் இன்றைய பதிவில் விளக்கமாக வழக்கு எப்படி தாக்கல் செய்வது நடைமுறைகளை தெரிந்து கொள்வோம் மற்ற நீதிமன்றங்களைப் பற்றி நுகர்வோர் நீதிமன்றங்களின் வகைகள் என தனி விளக்கமாக ஒருபதிவு போடுகிறேன். மேலும் தொடர்ந்து இந்த பதிவுக்கு தேவையான மாவட்ட அளவிலான மாவட்ட நுகர்வோர் குறை தீர் நீதிமன்றத்தை பற்றி பார்ப்போம்.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் நீதிமன்றம்:
பாதிக்கப்படும் நபர் கிட்டத்தட்ட ரூபாய் இருப்பது லட்சம்வரையிலான நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். மேலும் இதுபோலுள்ள வழக்குகளில் அவர்கள் ஆஜராவதும் கிடையாது இதனால் வழக்கு தள்ளுபடியாகும் சூழ்நிலைக் கூட ஏற்பட்டது.
இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும் நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
How to file a consumer complaint in india details
1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும்.
2. பாதிக்கப்பட்ட நுகர்வோர் எந்த நுகர்வோர் குறை தீர்மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கின்றாரோ அங்கு தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட நுகர்வோர் அந்த பிரச்சனை ஏற்பட்ட காலத்திலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது நுகர்வோர் வழக்கு தொடர முடியும் என்று பார்ப்போம் ?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், பேக்கரி, சைக்கிள் விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை
2. ஒரு நுகர்வோரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள் பொருந்தும், தனியார் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்குபவை ஆகும்.
உதாரணம் : அரசு மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை வாரியம், இன்ஸூரன்ஸ் கம்பெனிகள், வங்கிகள், மருத்துவமனைகள், கியாஸ் கம்பெனிகள், மற்றும் சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகங்கள், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை. காரணம் சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது.
உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது ஒரு அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர்.ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நபர் ஒரு சொத்தை வாங்க வேண்டும் என்று பதிவுத்துறை அலுவலகத்தில் வில்லங்க சான்று கேட்டு அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். அவர் கேட்டபடி எந்த வில்லங்கமும் இல்லை என சான்றும் சம்மந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்டுவிட்டது அதை நம்பி அந்த நபர் அந்த சொத்தை வாங்கிவிட்டார் ஆனால் வாங்கிய பின்னரே அந்த சொத்தில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது.இதனால் அந்த சொத்தை வாங்கிய நபருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே தவறான வில்லங்க சான்று கொடுத்தினால் தான் நஷ்டம் ஏற்பட்டது இதனால் வில்லங்க சான்று வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்று அந்த நபர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும் சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நுகர்வோர் வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்குகிறோம் என்று வைத்துக்கொண்டால் அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக கடைக்காரருக்கு தெரியப்படுத்துங்கள்.அவர் தெரிந்த பிறகும் அந்த தவறை சரி செய்ய மறுத்தார் என்றால் நீங்கள் நுகர்வோர் வழக்கு போடலாம்.
வழக்கு போடுவதற்கு முன் அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் லீகல் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய (AD CARD) பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் வழக்கு போடுவதற்கு பொருள் வாங்கிய ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட நபர் பொருளை வாங்கும் போது விலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்றால் விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் வழக்கிற்கு இது முக்கியமான சாட்சியாகும்.
நுகர்வோர் பொருள்களை வாங்கும் போது பொருளின் தரம் சம்பந்த பிரச்சனை என்றால் அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக்கிங் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் இது வழக்கில் முக்கிய சாட்சியாகும்.
கடையில் பொருள் வாங்கும் போது அதன் எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும் வழக்கில் இது முக்கிய சாட்சியாகும் ஏன் பாக்கினை திறந்து பார்க்க கூடாது என்றால் அதன் அளவை நாம் மாற்றலாம் என எதிர் தரப்பு நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்புள்ளது அதனால் வழக்கின் முக்கிய சாட்சியாகிய எடை குறைவாக உள்ள பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும்.
ஒரு வேளை பொருளை வாங்கியவுடன் திறந்து பார்த்துவிட்டிர்கள் அதற்கு பின் தான் எடை குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடித்தல் வழக்கில் எடையை நிரூபிக்க முடியாது என்பதால் அதே கடைக்கு சென்று மீண்டும் அதே பொருளை பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.அதன் எடையை பரிசோதித்து பார்க்கும் போது எடை குறைவாக இருந்தால் அதை வழக்கிற்கு சாட்சியாக பயன்படுத்தலாம்.
நுகர்வோர் வழக்கு போட பில் முக்கியமா என்றால் ஆம் எந்த கடையில் பொருளை வாங்கினோம் என்று நிரூபிக்க பில் அல்லது ரசீது இருக்கவேண்டும்.
நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்ய நீங்கள் வாங்கிய பொருளின் மேற்கண்ட அனைத்து சாட்சியங்களை சேகரித்த பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போகிறேன் என்று வழக்கறிஞர் ஆலோசனையோடு வழக்கறிவிப்பு அனுப்புங்கள்.
إرسال تعليق