இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் வங்கி பண பரிமாற்றம் பற்றி அறிந்திருப்போம் ஆனால் இந்த பண பரிமாற்றம் செய்யும் போது சில நேரங்களில் பணம் தவறாக வேறு நபர்களுக்கு சென்று விடலாம். எப்போதும் ஆன்லைன் மூலமாக பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


நாம் செலுத்தும் வங்கி கணக்கின் ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் வேறு தவறான நபருக்குச் சேர்ந்துவிடுகிறது.


இது போன்ற சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? என்ன செய்தால் அந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


தவறான வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது? 

இனி வரும் விஷயங்களை கவனமாக படிக்கவும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறையின்படி பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.


பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுண்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும். அதாவது நாம் செய்யும் தவறாலேயே பணம் தவறான கணக்கிற்க்கு போகுது என்று கருதப்படுகிறது.

இதற்கு சம்மந்தப்பட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.


ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும்.


  எனவே இது போன்ற தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.


ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கில் இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுண்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.


இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுண்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரியவந்தால் பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.


அதன்படி, எந்த வங்கி அக்கவுண்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டது, அந்த வங்கிக்கு நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.


  இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.


எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது அந்த அக்கவுண்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.


பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால் அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும்.


அதேபோல பணம் தவறாக மாற்றப்பட்ட அக்கவுண்டில் அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும்.


அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.


சிலநேரம் தனது அக்கவுண்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்க வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை அந்த அக்கவுண்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.


  உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது.


அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து காலதாமதம் ஆகலாம். உதாரணமாக ஒருவரின் அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறாமல் வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அக்கவுண்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின் மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும்.


இந்த இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது. அதேபோல அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால் அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.


ஏனெனில் முதல் தவறு பணப் பரிமாற்றம் செய்தவருடையது.


எனவே கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.


இதில் பணத்தைப் பெற்றவர் அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும் சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.


இதேபோல உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாறியிருப்பதாகத் தெரிந்தால் உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். தவறுதலாகப் பணத்தை யாராவது உங்களுடைய அக்கவுண்டில் போட்டால் அந்த நபருக்கு பணம் திரும்பத் தருவதே நல்லது.

Post a Comment

Previous Post Next Post